Thursday, September 29, 2011

kavithai solai

பந்தயம்

ப. மதியழகன்

ஆசை பின்னிய வலையில்
சிக்கிக் கொண்டேன்
ஆரம்பமும் முடிவுமற்ற
வட்டத்திலிருந்து
வெளியேற முடியவில்லை
காலச்சக்கரம்
என்னைப் பொறுத்த அளவில்
சுழலவில்லை
எது உண்மை
எது பொய்யென்று
பிரித்தறிய முடியவில்லை
ஒவ்வொருவருடைய மறுபக்கமும்
பீதியூட்டுகிறது எனக்கு
ஒன்றுக்கு பின்னால்
இருந்தால்தான்
பூஜ்யத்திற்கு மதிப்பு என
தெரிந்து வைத்திருக்கிறேன்
அடர்ந்த இருளைக் கடக்க
எனக்கு ஒரு சுடர் தேவை
விடை கிடைக்காத
கேள்விகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகிறது
வாழ்க்கைப் பாதையில்
சரியான வழியில்தான்
சென்று கொண்டிருக்கிறேனா என்று
இப்போதுதான் எனக்கு
சந்தேகம் வருகிறது
பந்தயத்தில்
வேடிக்கைப் பார்ப்பவனை
யார்தான் விரும்புவார்கள்
இரைக்காக தூண்டிலில் சிக்கிய
மீனைப் போல் துள்ளுகிறேன்
முகம் தெரியாத ஒருவரின்
வயிற்றுப் பசிக்கு
இரையாகத்தான்
வந்து பிறந்தேனா
மாயாஜாலம்
ஏதாவது நிகழ்ந்தால்தான்
மாற்றம் வரும்
எனது வாழ்வில்
வாழ்க்கைப் புத்தகத்தில்
எனது பக்கம்
வெற்றிடமாக
இருந்து விட்டுப் போகட்டும்
இயற்கையின் பேரதிசயத்தை
கண்கள் விரிய பார்த்த
பால்யத்தை தொலைத்துவிட்டு
அலைகிறேன்
கனவுக்கும் நனவுக்கும்
இடையேயான இடைவெளியை
நினைத்து நினைத்து
அழுகிறேன்.

No comments:

Post a Comment